Description
1. நிம்மதியாகத் தூங்குகிறீர்களா?
இன்றைய காலகட்டத்தில் தூக்கமின்மையும், தூக்கம் சார்ந்த நல பிரச்சினைகளும் அதிகரித்திருப்பதற்கு தூக்கத்தில் நாம் எந்த ஒழுங்கையும் கடைபிடிக்காதது தான் முக்கியமான காரணம்.
தூக்கம் தொடர்பாக நமக்குப் பல சந்தேகங்கள் இருக்கின்றன. இன்றைய நாளில் நம் எல்லோருக்குமே கூட அதில் கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் நிறைய இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும், யூ டியூப் போன்ற காணொளிகளிலும் தூக்கம் தொடர்பான மிதமிஞ்சிய தகவல்கள் இருக்கின்றன. தூக்கத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென நினைத்து ஒருவர் இதையெல்லாம் பார்த்தால் அதற்குப் பிறகு காலத்திற்கும் அவரால் நிம்மதியாகத் தூங்க முடியாது. ஏனென்றால் அவ்வளவு மிகைப்படுத்தப்பட்ட, தவறான தகவல்கள் இணையத்தில் உலவுகின்றன.
இந்த அதிகப்படியான, உறுதியற்ற, கவனத்தை ஈர்க்கும் தகவல்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்றால் தூக்கம் பற்றி நாம் சில அடிப்படைகளை உள்ளது உள்ளபடியே தெரிந்து கொள்ள வேண்டும். தூக்கம் பற்றி எந்த மிகைப்படுத்துதலும் இல்லாத, தெளிவான, அறிவியல் பூர்வமான தகவல்களையும், எளிய விளக்கங்களையும் உங்களுக்கு தரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தப் புத்தகத்தில் டாக்டர் சிவபாலன் விளக்கியுள்ளார்.
2. அச்சம், பதற்றம், அழுத்தம்
பிழைத்திருப்பது ஒரு மிகப்பெரிய பரிணாம சவால்.
ஆபத்துகளை உணர்ந்து கொள்வது, அதில் இருந்து விலகி ஓடுவது அல்லது ஆபத்தை எதிர்கொண்டு அழிப்பதே பிழைப்பதற்கான வழி. அதனால் பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு (survival instinct) மனிதனின் மரபணுவில் எப்போதும் இருக்கிறது.
இன்று நாகரீக மனிதன், காடுகளிலிருந்து நிலங்களுக்குப் புலம்பெயர்ந்து விட்டான். கொடிய விலங்குகளால் இன்று அவனுக்கு ஆபத்து இல்லை, அவைகளில் இருந்து தப்பிப்பதும், பிழைப்பதும் கூட அவனுக்கு முதன்மையானதாக இல்லை. ஒரு சமூக விலங்காகத் தன்னைத் தக்கவைத்துக்கொள்வதும், தனது சந்ததியின் நீட்சியை உறுதி செய்வதும்தான் அவனுக்கு இன்று தலையாய பிரச்சினை. அதனால் ஆபத்து என்பது கொடூரமான விலங்குகளால் இல்லை. மாறாக, அவன் சார்ந்திருக்கும் சமூகமே அவனுக்கு ஆபத்தானதாக இருக்கிறது, அன்றாட வாழ்க்கையில் அவன் அது போன்ற பல ஆபத்துகளை கடந்து வரவேண்டியிருக்கிறது. அவனது பிழைத்திருப்பதற்கான உள்ளுணர்வு (survival instinct) என்பது அன்றாட வாழ்க்கையில் அவன் எதிர்கொள்ளும் இது போன்ற ஆபத்துகளால் இன்றும் தூண்டப்படுகிறது. அதனால் மனிதன் இன்றும் பயப்படுகிறான், பதட்டமடைகிறான்.
3. கொரோனா: பெருந்தொற்றின் கொடுங்காலம்
2019 இறுதியில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்றும், அதன் நீட்சியான ஊரடங்கு காலகட்டமும் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கை முறையையும் புரட்டிப் போட்டிவிட்டது. இந்தக் காலம் சவால்களும், இன்னல்களும், நெருக்கடிகளும், குழப்பங்களும், அச்சங்களும், சில சாதகமான அம்சங்களும் என அத்தனையும் சேர்ந்து ஒரு வகையான கலவையாக இருந்தது. இந்தக் காலத்தில் நாம் எதிர்கொண்ட சில முக்கியமான பிரச்சினைகள் பற்றி இந்தப் புத்தகம் பேசுகிறது.
கொரோனா என்னும் கிருமி மட்டுமல்ல, மனிதர்களின் பலவீனங்களும், சிறுமைகளும், போதாமைகளும், சுயநலங்களும், பாரபட்சங்களும் கூட இந்தக் காலத்தில் மிகுந்திருந்தது. இந்த நெருக்கடி நிலையில் இருந்து நாம் வெளியே வரும்போதுதான் இதை எப்படி நாம் மோசமாக எதிர்கொண்டிருக்கிறோம் எனத் தெரிய வரும். அப்படி வெளியேவரும் நாளில், ஒன்றே ஒன்றை மட்டும் நினைத்து நாம் ஆசுவாசமடையலாம். “எதிர்காலத்தில் கொரோனா போன்ற ஒரு நோய் வந்து நாம் முடங்க நேரிட்டால், அதை நாம் இந்தளவிற்கு மோசமாக எதிர்கொள்ள மாட்டோம்” என்பதே அது. அந்த வகையில் இந்தக் காலத்தில் இருந்து நாம் பல படிப்பினைகளையும், அனுபவங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறோம்.
Reviews
There are no reviews yet.